போலி பட்டாவினை எப்படி கண்டுபிடிப்பது?
ஏமாற்று வேலை செய்பவர்களின் உலகத்தில் எல்லாவற்றிற்கும் போலி என்ற ஒன்று நிச்சயமாக உண்டு.
“திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.- அதை
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது”
என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் வரிகள் முக்காலத்திற்கும். யாவருக்கும் பொருந்துமாறு அமைகிறது.
நிதானம் அவசியம்.
நிலம் மற்றும் சொத்துக்கள் வாங்கும் போது நல்ல நிதானத்துடன் ஒவ்வொரு விசயங்களையும் அணுகவேண்டும். “அவசரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழியே சான்று.
சொத்தை வாங்க முற்படும் போது, எண்ணற்ற முகவர்களை அணுக நேரிடும், அவர்கள் நிறைய சொத்துகளை உங்களுக்கு காண்பிப்பார்கள். ஒவ்வொரு சொத்திற்கும் அழகிய வரலாறு மற்றும் எதிர்கால ஆருடமும் கூறுவார்கள். அவைகளுள் உங்களுக்கு ஒரு சொத்து பிடித்துப்போய்விட்டது என்றால், அவ்வளவு தான் முகவர்கள் கொடுக்கும் அலப்பறைக்கும் அளவே இருக்காது.
நிலத்தை பார்த்துவிட்டு வீட்டின் வாசலுக்கு தான் சென்றிருப்பீர்கள், அதற்குள் தொலைபேசியில் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். நாளை மாலைக்குள் நீங்கள் பார்த்த இடத்திற்கு முன்பணம் கொடுக்க ஆட்கள் வருகிறார்கள். நீங்கள் காலையில் முன்பணம் கொடுத்தால் நில உரிமையாளர் உங்களுக்கு முன்னுரிமை தருவார் என்றவாறு பல காரணங்களை அடுக்குமாடி அடுக்குவது போல் அடிக்கிக் கொண்டே செல்வார்கள். ஒருவேளை நீங்கள் சுதாரித்துக்கொண்டு, பரவாயில்லை அவரே வாங்கி கொள்ளட்டும் என்றும் கூறினீர்கள் என்றால், உங்கள் உடன்பிறவா சகோதரர் போல் உங்களுக்காக நில உரிமையாளரிடம் பேசி ஒருவாரம் கால அவகாசம் வாங்குவதாக கூறுவார்கள். பலவாறு அழுத்தங்களை கொடுத்து கிரையம் விரைவாக நடக்க ஏற்பாடு செய்வார்கள். வாங்கிய பின்பு பட்டா பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று உங்கள் முகவரை அழைத்தீர்கள் என்றால் இரண்டு விசயம் நட்க்கும்.
- அதிக பணம் செலவாகும் என்று கூறுவார்கள்.
- இந்த கிரகத்திலேயே இல்லை என்பது போல் நடந்து கொள்வார்கள்.
இது போன்று தர்மசங்கடத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சற்று நிதானத்துடன் நடந்து கொண்டால் யாவருக்கும் நலமே!
நிலம் உங்களுக்கு பிடித்துவிட்டது என்றால் வாங்குவதற்கு முன் செய்ய வேண்டிய வேலைகள்.
நிலம் உங்கள் எண்ணப்படி அமைந்து விட்டது என்றால், முதலில் நிலத்தின் உரிமையாளரை சந்தியுங்கள். அவரிடம் நிலத்தின் விவரங்களை சேகரியுங்கள். பிறகு சிறிய தொகையினை கொடுத்து நிலத்திற்கான ஆவணங்களை அவரிடமிருந்து வாங்குங்கள். அதனை நல்ல சட்ட ஆலோகசரிடம் கொடுத்து அந்த நிலத்தின் மீது ஏதாவது சட்ட சிக்கல்கள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
பட்டாவினை சரிபார்க்க என்ன செய்யவேண்டும்?
பட்டாவினை சரி பார்க்க தற்பொழுது நம் தமிழக அரசு இணைய வழி சேவையை வழங்கிக்கொண்டிருக்கின்றது.
இணையத்தின் முகவரி:
https://eservices.tn.gov.in/eservicesnew/home.html
இந்த இணையதளத்தில் நமக்கு என்ன சேவைகள் கிடைக்கின்றன என்பதனை பார்ப்போம்.
பட்டா/சிட்டா விவரங்களை பார்வையிட.
பட்டா/சிட்டா விவரங்களை சரிபார்க்க.
அ-பதிவேடு பற்றிய விவரங்களை பெற.
அரசு புறம்போக்கு நிலங்களின் விவரங்களை பெற.
நகர நில அளவை பற்றிய விவரங்களை பார்வையிட.
மற்றும் பல விவரங்களை நாம் இணையத்தின் வாயிலாகவே எளிமையாக பெறமுடியும்.
இணையத்தில் எவ்வாறு பட்டா/சிட்டா விவரங்களை பெறமுடியும்?
மேற்கண்ட திரையில் நமக்கு தெரியும் சேவைகளில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்யலாம். பட்டா/சிட்டாகளை பார்வையிட என்ற சேவையினை தேர்வு செய்தால்.
இந்த பக்கத்திற்கு வழிநடத்திச்செல்லும். இங்கு சில கேள்விகள் இருப்பதனை நாம் காண முடியும்.
நாம் தேடப்படும் பட்டா எந்த மாவட்டத்தினை சேர்ந்தது? என்று கீழ் நோக்கிய அம்பு குறியினை அழுத்தி தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்தடுத்து கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கும் சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அங்கீகார மதிப்பினை சரியாக எழுதிய பின்பு “சமர்ப்பி” என்ற பொத்தானை அழுத்தவும். இப்பொழுது உங்களுக்கு இணையத்தின் பட்டா கிடைக்கும்.
இந்த பட்டாவின் தகவல்கள் பத்திரத்தின் தகவல்களுடன் ஒத்துப்போகிறதா? என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.