பொது அதிகார பதிவுக்கு 1% கட்டணம்.. பத்திரப்பதிவு கட்டண உயர்வில் மாற்றமா? தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?
தமிழகத்தில் பத்திரப் பதிவு கட்டண உயர்வு குறைக்கப்படுமா? என்பது குறித்து அமைச்சர் பி.மூர்த்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பல காலமாகப் பதிவுத்துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. பொது அதிகாரம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை, கட்டுமான ஒப்பந்தம் போன்ற பத்திரங்களின் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு, பொதுமக்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது..
கட்டணம் உயர்வு: இந்த கட்டண உயர்வால், புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஒருவித தயக்கம் ஏற்படும் என்றும், அதிலும், செட்டில்மென்ட் (தான பத்திரம்) பத்திரத்தை பதிவு செய்ய, 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது, வெகுஜன மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், செட்டில்மென்ட் பத்திரத்துக்கான கட்டண உயர்வை பழைய கட்டணத்திற்கே அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், கட்டுமான ஒப்பந்த பதிவுக்கு, ஏற்கனவே 1 சதவீதம் கட்டணம் இருந்த நிலையில், இப்போது 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது... இதே போன்று, பொது அதிகார பதிவுக்கு 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவைகளுடன் பிற கட்டணங்களையும் சேர்த்தால், சொத்தின் மதிப்பில், 4 சதவீதத்தை கூடுதலாக செலவிட வேண்டி வருகிறது..
நிலமதிப்பு: நிலத்துக்கு மட்டுமே வழிகாட்டி மதிப்பு இருக்கும் நிலையில், கட்டடத்துக்கான மதிப்பை எப்படி கணக்கிடுவது என்பதில் குழப்பமும் ஏற்பட்டுள்ளதால், இந்த கட்டண உயர்வை, திரும்ப பெற அரசை வலியுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுக்க தொடங்கியதால், கட்டண உயர்வு தொடர்பாக கருத்து கேட்பு நடத்த பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது. அதன்படி, "பதிவுத்துறை சார்பில், பதிவு நடைமுறைகள் குறித்து, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவ, பதிவுத்துறை செயலர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக பத்திரம்: மேலும், இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம், தமிழக பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்று பேசினார்கள். அப்போது பொது அதிகார ஆவண பதிவு கட்டணம், 1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்கு பிறகு, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (கிரெடாய்) தலைவர் இளங்கோ பேசியபோது, 'பதிவுக்கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணம் மீது 1 சதவீதம் உயர்த்தப்பட்டதால் சொத்து விலைகளில் ஒரு சதுர அடிக்கு ஏறக்குறைய ரூ.100 என்ற கணிசமான விலை உயர்வை சந்தித்து உள்ளதாகவும், வீட்டு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை வாங்க வரும் நபர்களுக்கு ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
வருவாய் குறைவு: இதையடுத்து அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: "பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், தமிழகத்தில் பதிவு கட்டணம், வழிகாட்டி மதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. நாட்டிலேயே அதிக பத்திரங்கள் தமிழகத்தில் பதிவானாலும், வருவாய் குறைவாக உள்ளது. கடந்த நிதி ஆண்டில், 17,298 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில், இதுவரை, 5,841 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது, இது இலக்கை விட, 20 சதவீதம் குறைவு.
பத்திரப் பதிவு கட்டணத்தை, நான்கில் இருந்து இரண்டு சதவீதமாக குறைத்ததால், 1,000 கோடி கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யவே, பதிவு கட்டணங்களை மாற்றி அமைத்தோம்.
எதிர்பார்ப்பு: பொது அதிகார ஆவண பதிவு கட்டணம் தொடர்பாக, கட்டுமானத் துறையினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இதை இதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பத்திரப்பதிவு கட்டணங்களில் முதல்வர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கின்றது.